பெய்ரூட்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் ஹமாஸ் இயக்கத்தின் யாஹ்யா சின்வார். இவரை நேற்று இஸ்ரேல் படையினர் கொன்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் இயக்கத்தினர் 1200க்கும் மேற்பட்டோரை கொன்றனர்.250க்கும் மேற்பட்டோரை பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இது இஸ்ரேலை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வார் என்பவர். இவரை கொல்வதற்காக இஸ்ரேல் பல்வேறு திட்டங்களை தீட்டியது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு கடந்த சில நாட்களில் அதாவது நேற்று யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படையினர் கொன்றுள்ளனர்.இது குறித்த வீடியோவையும் வெளியிட்டனர். இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த யாஹ்யா சின்வார் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
அகதிகள் முகாமில் பிறந்தவர்: இஸ்ரேல் நாட்டின் படையால் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார் கடந்த 1962ஆம் ஆண்டு காசாவின் கான்யூனுஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட ஆயிரகணக்கானோர் அங்கு தங்கி இருந்தனர். 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவராக யாஹ்யா சின்வார் இருந்தார்.அப்போது இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் இருந்த கடற்பகுதியில் ரகசியமாக நடக்கும் ஹமாஸ் கூட்டங்களில் பங்கேற்றார்.
ஹமாஸ் இயக்கத்தின் நிறுவனரான ஷேக் அகமது யாசிடம் நெருங்கி பழகிய சின்வார், அவரிடம் ஒருமுறை, ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த சிலர் இஸ்ரேலுக்கு உளவு சொல்பவர்களாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் களையெடுக்க வேண்டும். அப்போதுதான் வலுவான இயக்கமாக ஹமாஸை முன்னெடுக்க முடியும் என்று கூறினார். அதன்படி சின்வார் தலைமையில் மஜித் என்ற பாதுகாப்பு அமைப்பை ஹமாஸ் தொடங்கியது.
1980ஆம் ஆண்டு இஸ்ரேலால் சின்வார் கைது செய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற விசாரணையில் இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்த 12 பேரை கொன்றதாக ஒப்புக் கொண்டார். மேலும் இரண்டு இஸ்ரேல் படை வீரர்களை கடத்தி கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சகோதரரை கொன்றவர் : சின்வாரிடம் விசாரணை மேற்கொண்டவர் இஸ்ரேலின் ஷின் பெட் பாதுகாப்பு அமைப்பின் விசாரணையகத்தின் முன்னாள் இயக்குனர் மைக்கேல் கோவ்பி என்பவராவார். இவர் சின்வார் குறித்து பேசியபோது, இஸ்ரேலுக்கு உளவு பார்ப்பதாக சொந்த தம்பியை சந்தேகத்தின் பேரில் கொன்றவர் சின்வார். இது குறித்து அவர் என்னிடம் விவரித்தபோது அவரது முகம் பிரகாசமாக இருந்தது,"என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அவருடன் சிறையில் இருந்த சக சிறைவாசிகள், சின்வார் பிறரை ஈர்க்கக்கூடியவர், நேசமான மற்றும் புத்திசாலியானவர், பல்வேறு அரசியல் குழுக்கள் தொடர்புடைய சிறையில் இருந்த நபர்களிடம் திறந்த மனதோடு பழகினார் என்கின்றனர். சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் இயக்கத்தினரின் தலைவராகவும் சின்வார் திகழ்ந்தார். சிறையில் வசதிகளை அதிகரிக்ககோரி அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டார். ஹீப்ரூ மொழியை படித்த அவர், இஸ்ரேல் சமூகத்தினர் குறித்து ஆய்விலும் ஈடுபட்டார்.
இதையும் படிங்க : 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை கொன்ற இஸ்ரேல்...போர் களத்தில் நடந்தது என்ன?
சின்வாருடன் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த லெபனான் நாட்டவரான அன்வர் யாசினி, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்.எதிரியின் மனநிலை எப்படி இருக்கும். அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார். நான் லெபனானின் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவன் என்றபோதிலும், அது அவரது கொள்கைக்கு விரோதமாக இருந்தபோதிலும் என்னிடம் மிகுந்த மரியா தை கொண்டிருந்தார்," என்று குறிப்பிட்டார்.
பாலஸ்தீனம் குறித்து சின்கார் எழுதிய நாவல் : சின்வார் சிறையில் இருந்தபோது 240 பக்கங்களைக் கொண்ட நாவல் ஒன்றை எழுதியுள்ளார். Thistle and the Cloves என்ற தலைப்பிலான இந்த நாவலில் 1967ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான பாலஸ்தீன சமூகத்தைப் பற்றி எழுதியுள்ளார்.இந்த நாவலின் ஆரம்பத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சின்வார்,"இது என்னுடைய சொந்த கதையோ அல்லது குறிப்பிட்ட நபருடைய கதையோ அல்ல. ஆனால், இதில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் உண்மையானதாகும்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு மூளையில் கேன்சர் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட சின்வார், டெல் அவிவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.ஹமாஸ் இயக்கத்தினரால் சிறை பிடிக்கப்பட்ட கிலாட் ஷாலிட் என்ற இஸ்ரேல் வீரரை விடுவிப்பதற்காக 2011ஆம் ஆண்டில் சின்வார் உள்ளிட்ட ஆயிரம் பேரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுதலை செய்தார்.
இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் சின்வார் திருமணம் செய்து கொண்டார். 2017ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புடன் மீண்டும் தொடர்புகளை புதுப்பிப்பதற்காக இஸ்மாயில் ஹனியே உடன் இணைந்து பணியாற்றினார். ஹமாஸ் ராணுவ பலத்தை கட்டமைப்பதில் சின்வார் கவனம் செலுத்தி வந்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்