நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்தது மட்டுமின்றி வரி பிரச்சனை காரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிய நோக்கியா செல்போன் உற்பத்தி தொழிற்சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிட்டது.
இந்நிலையில், ஆப்பிள், ஜியோமி, ஓப்போ, விவோ, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபின்லாந்தைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை வாங்க அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.