சேலம்:அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி கழக செயலாளர் சண்முகம்(62) நேற்று முன்தினம் இரவு கூலி படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேலம் மாநகராட்சி 55-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாரும், இரண்டாவது குற்றவாளியாக கவுன்சிலர் தனலட்சுமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
Published : Jul 5, 2024, 6:48 PM IST
மேலும், இந்த வழக்கில் தொடர்படைய 14 பேர் மீது அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கூலிப்படையினரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் சதீஷ்குமார் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர் தனலட்சுமி உள்பட நான்கு பேர் தலைமறைவாக உள்ளதால்,போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் இன்று(ஜூலை 5) மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு பிறகு மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.