சென்னை: பிரபல நடிகை சோனா, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 28வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சோனாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து, வெளிப்புறம் பொருத்தப்பட்டிருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர்.
அப்போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனாவை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த நேரத்தில் சோனா ஓடிய போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் சோனா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயலைச் சேர்ந்த சிவா (23) மற்றும் லோகேஷ் (21) என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.