கோயம்புத்தூர்:பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் அரசுப் பேருந்து தீப்பிடித்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!
Published : 18 hours ago
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்துள்ளது. பேருந்து ஈச்சனாரி அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்தபோது, பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி உடனடியாக பயணிகள் அனைவரையும் கீழே இறக்கியுள்ளார்.
பயணிகள் கீழே இறங்கிய நிலையில், பேருந்து திடீரென தீப்பிடித்துள்ளது. சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.