சிவகங்கை: சிங்கம்புணரி முத்தையா காலனி குடியிருப்பு பகுதியில், நேற்று முந்தினம் இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் தேடியபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கழுத்து மற்றும் கை அறுபட்ட நிலையில் கிடந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண், குழந்தையை மீட்டு சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர் சுருதி ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும், குழந்தையின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் கழுத்து, கையை அறுத்து தூக்கி வீசிச் சென்றது தாயா அல்லது வேறு யாரேனுமா என சிங்கம்புணரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.