சென்னை:சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகள் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோயம்பேடு காய்கறி வளாகம் செயல்படக்கூடிய அனைத்து இடங்களிலும் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் காய்கறி மூட்டைகளை ஆபத்தான நிலையில் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
Published : Jun 7, 2024, 6:52 PM IST
மழையால் சேறும், சகதியுமாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட்!
இதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் சேறும், சகதியும் சேர்ந்துள்ளதால் நடக்க முடியாத சூழல் உருவாகியிருப்பதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காய்கறி வாங்கக்கூடிய மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் மார்க்கெட்டிற்கு வரும் மக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
மார்க்கெட்டில் முறையான வடிநீர் கால்வாய் தூர்வாரப்படாததாலும், எம்எம்சி நிர்வாகம் முறையாக குப்பையை அகற்றாமல் இருப்பதும் தான் இதுபோன்ற சூழல் ஏற்பட காரணம் என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.