தமிழக ஆளுநர் உதகை பயணம்: தோடர் பழங்குடியின மக்களுடன் நடனமாடி மகிழ்ச்சி! - Nilgiri
Published : Feb 16, 2024, 6:04 PM IST
நீலகிரி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று (பிப்.15) வருகை புரிந்தார். உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள ஆளுநர், இன்று (பிப்.16) தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்த ஆளுநருக்கு தோடர் பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் அவர்கள் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், அவரது மனைவிக்கும் தோடர் இன மக்களின் பாரம்பரிய புத்துக்குளி சால்வை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து தோடர் இன மக்களின் பாரம்பரிய குல தெய்வக் கோயிலை பார்வையிட்டு வழிபாட்டு முறைகளை கேட்டறிந்தார். பின்பு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தோடர் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் தோடர் பழங்குடியின இளைஞர்கள் ஆளுநர் முன்பு இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர்.
தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை பார்வையிட்ட ஆளுநர், பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். இது குறித்த காணொலி இணையத்தில் பகிரப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.