சிலிண்டரை இடுப்பில் கட்டிக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தொண்டர்! - Lok Sabha Election 2024
Published : Apr 2, 2024, 8:09 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியைச் சேர்ந்த திமுக கிளை செயலாளரான தம்பிராஜ் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து வினோதமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் தமிழக முதல்வரின் வாக்குறுதி, மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என்கிற ஸ்டிக்கரை காலி கேஸ் சிலிண்டரில் ஒட்டி, அதை இடுப்பில் கட்டி தொங்கவிட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வினோதமான பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் வடசித்தூர் வாரச்சந்தைப் பகுதிக்குச் சென்று சந்தைக்குப் பொருட்களை வாங்க வந்திருந்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில். "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரைச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டக் கூடியவர்.
அதேபோல முதல்வர் ஸ்டாலின் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சில வாக்குறுதிகளைக் கூறியிருக்கிறார். அது என்னவென்றால், ஏழை தாய்மார்களின் துயரைத் துடைக்கும் வகையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65 ஆக குறைக்கப்படும் என்பதாகும்.
இதுமட்டும் அல்லாது, நூறுநாள் வேலைத் திட்ட ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளைக் கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலின் சொன்ன வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றினாரோ, அதேபோல இந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அதனால் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்" என்று பேசினார்.