Published : May 28, 2024, 9:18 AM IST
தாம்பரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Two Wheelers colliding CCTV
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஆதித்யா நகர் பார்க் சந்திப்பில், வேங்கைவாசலில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி 2 சிறுவர்கள் பைக்கில் வேகமாக வந்து கொண்டிருந்துள்ளனர். அதேபோல, அதற்கு நேர் பக்கவாட்டு சாலையிலிருந்து ஜெயந்தி என்ற பெண் கடைக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டியில் வந்துள்ளார்.
இந்நிலையில் இரு இருசக்கர வாகனங்களும் ஆதித்யா நகர் பார்க் சந்திப்பை கடக்கும் போது, எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. அதில், வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக வந்து அனைவரையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்விபத்தில், நல்வாய்ப்பாக மிகப்பெரிய சேதம் எதுவும் இல்லை எனவும், சிறுவர்கள் இருவருக்கும் லேசான காயங்கள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்ணுக்கு மட்டும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், 2 இருசக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளான காட்சி பார்க் அருகே உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.