தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

Exclusive | சந்திரயான்-4 திட்டம்: ராக்கெட்டில் ஏவப்படும் 9 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்கள்! - NARAYANAN TALKS CHANDRAYAAN 4

வரவிருக்கும் சந்திரயான்-4 குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உடன் ஈடிவி பாரத் செய்தியாளர் அனுபா ஜெயின் நடத்திய பிரத்யேக கலந்துரையாடலைப் பார்க்கலாம்.

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tech Team

Published : Feb 15, 2025, 8:09 PM IST

பெங்களூரு: இந்தியா அடுத்த ஆண்டில் ககன்யான், சமுத்ரயான் ஆகிய திட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து 2027 இல் சந்திரயான்-4 ஏவப்படும். இந்த சூழலில் இஸ்ரோ (ISRO) தலைவர் வி நாராயணன், ஈடிவி பாரத் பத்திரிகையாளர் அனுபா ஜெயின் உடனான ஒரு பிரத்யேக நேர்காணலில், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் அடுத்த நிலவுப் பயணமான சந்திரயான்-4 குறித்த பல சிறப்புத் தகவல்களை பகிர்ந்துள்ளார். கூடுதலாக, அவர் சந்திரயான்-4 க்கும் சந்திரயான்-3 க்கும் இடையிலான வேறுபாட்டையும் விளக்கினார். இந்த பிரத்யேக நேர்காணலின் விவரங்களை இப்போது பார்ப்போம்.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக அளவில் ஒரு புதிய சாதனையை படைத்தது. ஏனெனில், அது அவ்வாறு செய்த உலகின் முதல் விண்வெளி நிறுவனமாக ஆனது. இது குறித்து இஸ்ரோ தலைவர் வி நாராயணன் கூறுகையில், "சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, மேற்பரப்பு தாதுக்கள், வெப்ப சாய்வுகள், எலக்ட்ரான் மேகங்கள், பூகம்ப செயல்பாடுகள் குறித்த பல சிறப்புத் தரவுகளை வழங்கியுள்ளது. ஆனால் சந்திரயான்-4 அதை விட ஒரு பெரிய படியாக இருக்கும். இது நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்குவது மட்டுமல்லாமல், அங்கிருந்து மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனையும் செய்யும்." என்று தெரிவித்தார்.

சந்திரயான்-4 குறித்து விரிவான தகவல்களை வழங்கிய இஸ்ரோ தலைவர், சந்திரயான்-4 செயற்கைக்கோளின் எடை 9,200 கிலோவாக இருக்கும் எனவும், இது சந்திரயான்-3 இன் 4,000 கிலோவை விட மிகவும் அதிகம் என்று கூறினார்.

மேலும், "அதன் பெரிய அளவு காரணமாக, அதை விண்வெளியில் அனுப்ப இரண்டு மார்க் 3 (Mark III) ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த முழு திட்டமும் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்படும். அவை இரண்டு குழுக்களாக (Stacks) பிரிக்கப்படும். இந்த தொகுதிகள் பூமியின் சுற்றுப்பாதையில் ஒன்றிணைந்த பின், அங்கு ராக்கெட்டின் உந்துதல் அமைப்பு பிரிக்கப்படும்."

தொடர்ந்து பேசிய நாராயணன், "சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் நான்கு தொகுதிகள் நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும். அவற்றில் இரண்டு நிலவின் மேற்பரப்பில் இறங்கும். அவற்றில் ஒன்று மட்டுமே மாதிரி தொகுதியாக இருக்கும். அது மட்டும் பூமிக்குத் திரும்பும். மற்ற இரண்டு தொகுதிகள் நிலவின் சுற்றுப்பாதையில் இருக்கும். அதாவது, இஸ்ரோ ஒரு தொகுதியை நிலவின் மேற்பரப்பில் விட்டுவிடும்," என்று தெரிவித்தார்.

இவை அனைத்தையும் தவிர, இஸ்ரோ தலைவர் இந்த நேர்காணலில் வீனஸ் திட்டம் (வெள்ளி கிரகம்) குறித்து பேசினார். வீனஸ் திட்டம், செவ்வாய் சுற்றுப்பாதை திட்டம் (Mars Orbiter Mission) உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இருப்பினும், தங்களது சிறப்பு கவனம் லூனார் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் திட்டத்தின் (LUPEX) மீது உள்ளதாக கூறினார்.

“இது சந்திரயான்-3 திட்டத்தின் பெரிய மற்றும் மேம்பட்ட பதிப்பாகும். இந்த திட்டத்தில் 250 கிலோ எடை கொண்ட ஒரு ரோவர் இருக்கும். அதே நேரத்தில் சந்திரயான்-3 ரோவரின் எடை வெறும் 25 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துக்கான தயாரிப்புகள் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து செய்யப்படுகின்றன. இது நிலவை ஆராய்வதற்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஒரு முக்கியமான படியாக இருக்கும்." என நாராயணன் குறிப்பிட்டார்.

இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்கள்

இஸ்ரோவின் தலைவர் முந்தைய இரண்டு சந்திரயான் திட்டங்கள் குறித்து பேசுகையில், முந்தைய இரண்டு சந்திரயான் திட்டங்களும் நிலவின் மேற்பரப்பு, துணை மேற்பரப்பு, நிலவின் வெளிப்புறச் சூழலைப் படித்தன என்று கூறினார்.

சந்திரயான்-2 திட்டத்தில் ஆப்டிகல் பேலோடுகள் உலகில் சிறந்தவை என்றும், அதில் பொருத்தப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் இஸ்ரோவின் சிறந்த திறனை வெளிப்படுத்தின என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் மூன்றாவது சந்திரயான் மிஷன் நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் தரையிறங்கியது. அங்குள்ள மண் மற்றும் அருகிலுள்ள மேற்பரப்பு பிளாஸ்மாவை ஆய்வு செய்தது. கூடுதலாக, சந்திரயான்-3 நிலவின் தென் துருவ மேற்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளையும் பதிவு செய்துள்ளது.

சூரியனிலிருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் கதிர் நிலவின் மேற்பரப்பில் மோதும் போது, அந்த மேற்பரப்பின் வளிமண்டலம் மிகவும் அயனியாக்கம் (Ionized) அடைகிறது. இதன் காரணமாக, எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகள் (நேர்மறை சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள்) உருவாகின்றன. அவற்றை நாம் அருகிலுள்ள மேற்பரப்பு பிளாஸ்மா என்று அழைக்கிறோம். சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தின் அருகிலுள்ள மேற்பரப்பு பிளாஸ்மாவை ஆய்வு செய்துள்ளது. இந்த தகவல்கள் எதிர்காலத்தில் நிலவு தொடர்பான ஆய்வுகளுக்கு மிகவும் அவசியமாக இருக்கலாம்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, இப்போது சந்திரயான்-4 திட்டத்தின் நேரம் வந்துவிட்டது. சந்திரயான்-4 திட்டத்தின் வெற்றி இந்தியாவின் நிலவு திட்டத்துக்கான (Lunar Exploration) பெரிய நகர்வாக இருக்கும். இதன் நோக்கம் நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதாகும். நிலவின் மேற்பரப்பின் இந்த மாதிரிகள் அங்குள்ள வெவ்வேறு புவியியல் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும். இதனால் நிலவின் வெப்ப வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சீனாவின் Chang'e-5 சந்திர மண்டலத் திட்டம், நிலவின் மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்தது. ஆனால் அவை புவியியல் ரீதியாக ஒரு இளம் மண்டலத்தின் மாதிரிகள் மட்டுமே. அதே நேரத்தில், அமெரிக்காவின் அப்போலோ, ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலமும் நிலவின் மாதிரிகள் பூமிக்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால் அவையும் அதே புவியியல் பகுதியின் மாதிரிகளாக இருந்தன,” என்றார்.

மேலும், அந்த திட்டங்களில் நிலவின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள மாதிரிகளின் தகவல்களை குறித்து அறிய முடியவில்லை; இஸ்ரோவின் சந்திரயான்-4 திட்ட நிலவின் வெவ்வேறு புவியியல் பகுதிகளிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரும் எனவும் இதன் மூலம் இந்தியா மற்றும் இஸ்ரோவின் பெயர் உலக அரங்கில் உயர்ந்த இடத்தை எட்டும் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details