திருநெல்வேலி: மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நந்தினி மக்களுக்காக போராடும் கட்சி என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம் மிஷின்) முறைகேடு நடப்பதாக பிரசாரம் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இவிஎம் மிஷினில் நடக்கும் முறைகேடுகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்க, மாதிரி மிஷின் தயார் செய்துள்ளதாகவும், அதை நிரூபித்து காட்ட நேரம் ஒதுக்கி தரும்படியும் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அந்த வகையில் இன்று (பிப்.19) அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து நந்தினி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '' இவிஎம் மிஷினில் நம்பகத்தன்மை இல்லை. பட்டனில் நாம் செலுத்தும் ஓட்டை மாற்ற முடியும். மிஷினில் ஒரு சிப் இருக்கும், இதே மாதிரி ஒரு மிஷினை நாங்கள் தயார் செய்துள்ளோம். அதை டெமோ செய்து காண்பிக்க தயாராக உள்ளோம். இவிஎம் மிஷின் நம்பகத்தன்மையானது தான் என்று கலெக்டர் தான் மக்களிடம் பிரசாரம் செய்கிறார். அவர் தான் தேர்தலை நடத்துகிறார்.
எனவே அவரிடம் நாங்கள் முறைகேடு குறித்து நிரூபிக்கிறோம். நேரம் தாருங்கள் என கேட்டு மனு அளித்துள்ளோம். நேரம் தருவதாக கூறியுள்ளனர். உலகம் முழுவதும் வாக்கு சீட்டு தான் நடைமுறையில் உள்ளது. எனவே தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். நியாயமாக தேர்தல் நடந்தால் தான் நாட்டில் டாஸ்மாக் பிரச்சனை முடிவுக்கு வரும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். எனவே ஓட்டுரிமையை மீட்கவே இதை முன்னெடுத்து வருகிறோம்.
இதையும் படிங்க: ஆபீஸ் போட்டு மோசடி செய்த பாஜக பிரமுகர்; ரூ.17 லட்சத்துடன் எஸ்கேப்!
திடீரென இப்பிரச்சனையை கையில் எடுக்கவில்லை. 2018ல் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறோம். டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் என இந்தியா முழுவதும் மக்களை சந்தித்து இவிஎம் மிஷின் வேண்டாம் என வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டை விட வடநாட்டு மக்கள் அதிக ஆதரவு தருகிறார்கள். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ், பாஜக கட்டுப்பாட்டில் தான் ஆட்சி நடக்கிறது. மக்களின் ஓட்டை நம்பி யாரும் தேர்தலில் நிற்பதில்லை; அவர்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களை கொண்டு வருவார்கள். ஓட்டுரிமையை மீட்டால் தான் நாட்டில் எல்லா பிரச்சனையும் சரியாகும். திமுகவும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது'' என தெரிவித்தார்.