விருதுநகர்:அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை விபரங்கள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்மலா தேவி வழக்கில் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில்,
நிர்மலா தேவி வழக்கிலே இன்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சமூகத்திற்குத் தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
இருந்தபோதிலும் முதல் குற்றவாளியைத் தவிர இரண்டு, மூன்றாம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தண்டனை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற முதல் குற்றவாளி வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று அதை இன்றே முடிவு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகள் தொடர்பான அவர்களுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறி உள்ளதால் அவர்கள் விடுதலை ஆகி உள்ளார்கள் இருந்தபோதிலும் சட்ட நுணுக்கங்கள் கொண்டு மேல்முறையீடு செய்யப்படும்.