சென்னை:நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதும், வெற்றிக்கு பிறகு மீண்டும் மக்களை ஏமாற்றுவதும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 10) வெள்ளிகிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில், நீட் தேர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வதாக திமுக அறிவித்திருந்தது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை ரத்து செய்து இருப்போம். ஆனால், அதிமுகவின் ஆதரவு பெற்ற பாஜக தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:யார் கள்ளக்கூட்டணி...? பொங்கிய எதிர்க்கட்சி தலைவர்... முதல்வருடன் காரசார விவாதம்...!
இந்த நிலையில், நீட் தேர்வு விவகராம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் திமுக அரசை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.
தேர்தலின் போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது, மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.