தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காது கேளாதோருக்கான கிரிக்கெட்; இங்கிலாந்தை வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! அரசு வேலை வழங்கக் கோரிக்கை - Deaf cricket tournament

India Deaf Cricket Team Win T20: இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற காது கேளாதோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் உள்ள தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மாநில அரசு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், காது கேளாதவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 9:02 AM IST

கிரிக்கெட் வீரர்கள்  சாய் ஆகாஷ், சுதர்சன்
கிரிக்கெட் வீரர்கள் சாய் ஆகாஷ், சுதர்சன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இந்தியா - இங்கிலாந்து இடையே காது கேளாதவர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் 5 - 2 என்ற கணக்கில் இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இதில், இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் இடம் பெற்றிருந்தனர்.

கிரிக்கெட் வீரர்கள் சாய் ஆகாஷ், சுதர்சன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில் சாய் ஆகாஷ் இந்திய காது கேளாதோர் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர்கள் இருவரும் இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு பங்காற்றி உள்ளனர். 7 போட்டிகள் கொண்ட தொடரில் துணைக் கேப்டன் சாய் ஆகாஷ் 271 ரன்கள் குவித்துதொடர் நாயகன்விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இன்று சென்னை திரும்பினர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இருவருக்கும் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய காது கேளாதோர் அணியின் துணை கேப்டன் சாய் ஆகாஷ், “இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்பு அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடி தேர்ச்சி பெற்றோம். நான் இந்திய அணையின் துணை கேப்டனாக உள்ளேன்.

சுதர்சன் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக உள்ளார். இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவிய பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 5 போட்டியில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்திய அணியினர் ஒற்றுமையாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம்.

இங்கிலாந்து ஆடுகளத்தின் சூழ்நிலைகள் தெரியாததால் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பிறகு சிறப்பாக விளையாடி தொடர்ந்து 5 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது” என்றார். இதனைத் தொடர்ந்து இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சுதர்சன் கூறுகையில், “இங்கிலாந்திடம் ஐந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனது பெற்றோர்கள், நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர். அனைவருக்கும் நன்றி” என சைகை மொழியில் பேசினார். அதனை நம்மிடம் சாய் ஆகாஷ் விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து சாய் ஆகாஷ் தாய் காந்திமதி கூறுகையில், “சிறுவயதிலிருந்தே எனது மகனுக்கு கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிடிக்கும். அவருடைய ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவளித்து உதவியதால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார்.

அரசு வேலை வழங்கக் கோரிக்கை:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பிள்ளைகளுக்கு அவரது பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுபோன்ற வெற்றி பெற்று சாதனை படைப்பவர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் காது கேளாதவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சுதர்சன் தாய் லதா கூறுகையில், "எனது மகன் சுதர்சன் ஏழு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அவர் எந்த பயிற்சியும் எடுக்காமல் சாதாரணமாக வீட்டு அருகே உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடி இவ்வளவு தூரம் வந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

காது கேளாதோர் கிரிக்கெட் போட்டி தமிழகத்திலும் வேண்டும்:சாய் ஆகாஷ் தந்தை சைவமணி கூறுகையில், “பயிற்சியாளர் உதவின்றி தொலைக்காட்சி மூலமாக தானாகவே கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டார். காது கேளாதவர்களுக்கான கிரிக்கெட் அணி இருக்கிறது என்றே தமிழகத்தில் பலருக்கும் தெரியாது. ஆனால், வட இந்தியாவில் அப்படி இல்லை. எல்லாருக்கும் தெரியும். எல்லா சேனல்களிலும் ஒலிபரப்புவார்கள். அதுபோல், தமிழகத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய அளவிலான காது கேளாதோர் கிரிக்கெட் போட்டியை தமிழகத்திலும் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு! - PM Modi Meet Indan team

ABOUT THE AUTHOR

...view details