சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தார். தற்போது, அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் 6-வது நாள் அதாவது ஜனவரி 10-ம் தேதி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கடுமையான சட்டத்திருத்தத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஆய்வுக்குப் பின்னர், குரல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய நகரி சுரக்ஷா ஆகிய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 86 சதவிகிதம் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினால் தூக்குத் தண்டனை, பெண்களைப் பின் தொடர்ந்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையிலான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க:5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நிலப்பரப்பில் இருந்து இரும்பின் காலம் தொடங்கியது...முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்!
இந்த நிலையில், அந்த மசோதாக்களுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.