சென்னை: தமிழகத்தை உலுக்கியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ''கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவுகள் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அப்பாவி மக்களின் உயிரிழப்புகள், அவர்களது உறவினர்கள் கதறல் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இவர்களது குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் பல நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இருப்பினும், இக்குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்ய முடியாததாகும். இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அரசு நிர்வாகம் திறம்பட செயல்படவில்லை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் உட்பட சிலரின் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். கள்ளச்சாராய விற்பனையை ஒழித்துக்கட்டுவதில் அரசு நிர்வாகம் திறம்பட செயல்படவில்லை என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் கள்ளச்சாராயம் பல ஆண்டுகளாக விற்பனையாகி வருவது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்தது அல்ல. அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடனேயே கள்ளச்சாராய வியாபாரம் நடந்துள்ளது. எனவே, கள்ளச்சாராய சாவுகளுக்கு காவல்துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் சம்பந்தபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.