தமிழ்நாடு

tamil nadu

"தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா பாஜகவின் சூழ்ச்சி" - தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் அன்சாரி விமர்சனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 2:05 PM IST

Updated : Mar 11, 2024, 2:32 PM IST

TNTJ secretary Ansari: தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமாவும், அதனை சில மணி நேரங்களிலேயே குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதும் பாஜகவின் சூழ்ச்சியா என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி
தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி

தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி

தஞ்சாவூர்:கும்பகோணம் சாந்தி நகர் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை வடக்கு மாவட்ட கிளையில் 19வது பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. இதில், அவ்வமைப்பின் பொருளாளர் ஷாகுல், துணைத் தலைவர் சிக்கந்தர் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்சாரி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலாளர் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்ததும், அவரது ராஜினாமாவை சில மணி நேரங்களிலேயே குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதும் பாஜகவின் சூழ்ச்சியா என்கிற எண்ணத்தையும், மிகப்பெரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தற்போது நாடு முழுவதும் இவிஎம்(EVM) இயந்திரம் மீது நம்பிக்கை இழந்து, வாக்கு சீட்டு முறை வேண்டும் என்கிற கருத்து மக்கள் மத்தியில் வலுவாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக அரசு, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து பல ஆயிரம் கோடி மதிப்பிற்கு தேர்தல் பத்திர மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து நோக்கத்தில் தான் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும், போதைப்பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் இருப்பதாக பாஜக அரசு சித்திரித்து வருகிறது. ஆனால், வடமாநிலங்களில் டன் கணக்கில் போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, போதைப்பொருட்கள் புழக்கம் எங்கு நடைபெற்றாலும் அவற்றை ஒழிக்க வேண்டியது அவசியம்.

அவற்றை பதுக்குவோர், விற்பனை செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் அவசியமான ஒன்று. இது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறோம்.மேலும், தற்போது இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு அதிகரித்து தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அமைப்பின் ஆதரவு யாருக்கு என செய்தியாளர் எழுப்பினார். அதற்கு, "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் எந்த ஒரு கருத்தையும் சொல்வதில்லை என்பது எங்களது நிலைபாடு. ஆனால், மக்கள் யார் ஆட்சியில் இருக்க வேண்டும், யார் ஆட்சியில் இருந்து விளக்கப்பட வேண்டும் என்று தெளிவான சிந்தனையை மக்கள் பெற்றுள்ளனர். அதற்கான விழிப்புணர்வும் நாங்கள் வழங்கிவருகின்றோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ஜாபர் சாதிக்குடன் மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Last Updated : Mar 11, 2024, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details