தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மழை நிலவரம்: சென்னைக்கு ரெட் அலெர்ட்! யாரும் வெளியே செல்ல வேண்டாம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 2 hours ago

tamil nadu rains weather live updates and latest news thumbnail
தமிழ்நாடு வானிலை நிலவரம் (ETV Bharat Tamil Nadu)

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 16ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

LIVE FEED

1:44 PM, 15 Oct 2024 (IST)

பெருங்குடியில் பயங்கர வெள்ளம்! சென்னை வெதர்மேன் அளித்த லைவ் ரிப்போர்ட்!

வானிலையைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லும் சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான், பெருங்குடி சாலையில் பயணித்துள்ளார். அப்போது அதை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கொட்டும் பயங்கர மழையில் என் பெரிய கண்களுக்கே சாலை தெரியவில்லை. பெருங்குடி சாலை மொத்தம் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

1:29 PM, 15 Oct 2024 (IST)

பெரம்பூர், கொளத்தூர், அயப்பாக்கம் பகுதிகளில் அதிகபட்ச மழை!

சென்னையில் பெய்ந்த மழையின் அளவு தொடர்பான தகவல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் கொளத்தூர், பெரம்பூர், அயப்பாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர் மேற்கு, வேளச்சேரி, நியூ மணாலி டவுன், கதிவாக்கம் ஆகிய இடங்களில் 120 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 15, பகல் 12 மணிவரை சென்னையில் பெய்த மழையின் அளவு. (Greater Chennai Corporation)

1:09 PM, 15 Oct 2024 (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்திய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு க ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னை யானை கவுனி பகுதியில் நடைபெற்ற வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், சாலையோர தேநீர் கடையில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தி தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஓட்டேரி பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினார்.

12:58 PM, 15 Oct 2024 (IST)

சென்னையில் இதுவரை பதிவான மழை நிலவரம்!

சென்னையில் 24 மணி நேரத்தில் 46.48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.1 மிமீ மழையும் தேனாம்பேட்டையில் 6.1 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 8 மரங்கள் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழுந்துள்ளது.

12:42 PM, 15 Oct 2024 (IST)

உடனடியாக வெள்ளத்தை அப்புறப்படுத்துங்கள் - மக்கள் கோரிக்கை!

கனமழையினால் ஏற்படும் வெள்ளத்தைத் தேங்கவிடாமல் அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மழை நீரினால் தேங்கும் வெள்ளத்தில் பள்ளம் மேடு தெரியாமல் வாகனம் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

12:21 PM, 15 Oct 2024 (IST)

நீரில் மூழ்கும் சுரங்கப் பாதைகள்!

வியாசர்பாடி, கணேசபுரம், பெரம்பூர் ஹைரோடு, வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், அரங்கநாதன் ஆகிய சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, இந்த பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை சுரங்கப்பாதைகளின் நிலவரம். (ETV Bharat Tamil Nadu)

12:06 PM, 15 Oct 2024 (IST)

சென்னைக்கு ரெட் அலெர்ட்!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளுக்கு, அடுத்த 24 மணிநேரம் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

12:02 PM, 15 Oct 2024 (IST)

முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில், யானைகவுனி, புளியந்தோப்பு ஆகிய மழை வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

11:52 AM, 15 Oct 2024 (IST)

தேமுதிக அலுவலகக் கதவுகள் திறந்திருக்கும்!

மழை வெள்ளதால் பாதிக்கப்படும் மக்களுக்கு தங்க இடம், உணவு ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம் என தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

11:46 AM, 15 Oct 2024 (IST)

மழை பாதித்தப் பகுதிகளில் ஆய்வு; களத்தில் இறங்கும் முதலமைச்சர்!

மழை பாதித்தப் பகுதிகளை இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

11:38 AM, 15 Oct 2024 (IST)

சென்னை விமானங்கள் ரத்து?

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு விமானங்கள் வெளியூர்களில் இருந்து வருகை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.

11:10 AM, 15 Oct 2024 (IST)

துணை முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு; இரண்டு சுரங்கப்பாதைகள் மூடல்!

தமிழ்நாட்டில் தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் என்ன என்பதை கீழ்வருமாறு காணலாம்.

  • இதுவரை 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில், 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  • சென்னை கணேசபுரம் மற்றும் பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
  • 300 இடங்களில் நீர் வெளியேற்றும் பணிகள் நடந்துவருகிறது.
  • கடந்த 24 மணிநேரததில் எங்கும் மின்வெட்டு ஏற்படவில்லை.
  • தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.
  • சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர்.
  • ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை அனுமதிக்கும்படி அறிவுறுத்தப்படும்.
  • தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்களைக் கொண்டு 26 பணி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சென்னையில் 89 படங்குகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன.
  • சென்னையைச் சுற்றிலும் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
  • சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் சேவையளிக்க தயாராக உள்ளன.
  • சென்னையில் 15 ஐஏஎஸ் அலுவலர்கள் வெள்ளத்தைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

10:48 AM, 15 Oct 2024 (IST)

சுரங்கப்பாதையில் 3 அடி வெள்ளம்?

பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் சுமார் மூன்றடி அளவிற்கு வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதை (ETV Bharat Tamil Nadu)

10:35 AM, 15 Oct 2024 (IST)

சென்னை மண்டல மின் வாரிய அலுவலர்கள் தொடர்பு எண்கள் வெளியீடு!

சென்னை நகரில் மழை நேரங்களில் மின்சார பிரச்சினைகள் இருந்தால், அலுவலர்களைத் தொடர்புகொள்ளும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

10:21 AM, 15 Oct 2024 (IST)

ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம்!

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

10:14 AM, 15 Oct 2024 (IST)

பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மழை வெள்ளம்!

சென்னை நகர் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளின் நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மட்டும் நீர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation)

10:05 AM, 15 Oct 2024 (IST)

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த இரண்டு தினங்களுக்கு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:47 AM, 15 Oct 2024 (IST)

வேளச்சேரி மேம்பாலத்தில் தஞ்சமடைந்த கார்கள்!

வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாவது நாளாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. பொதுமக்கள் மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் காட்சி. (Etv Bharat Tamil Nadu)
Last Updated : 2 hours ago

ABOUT THE AUTHOR

...view details