தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதானியை முதல்வர் மருமகன் சந்திப்பதில் தவறில்லை.. ஏனென்றால்.. - பாயிண்டாக பேசிய செல்வப்பெருந்தகை - SABAREESAN MET ADANI

விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றில்லை என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

செல்வப்பெருந்தகை, அண்ணாமலை (கோப்புப்படம்)
செல்வப்பெருந்தகை, அண்ணாமலை (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2024, 1:50 PM IST

Updated : Dec 12, 2024, 1:56 PM IST

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

கமிட்டி சீரமைப்பு பணி

அப்போது பேசிய அவர்,"தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களுக்கும் கமிட்டி சீரமைப்பு பணியை துவக்கவுள்ளோம். இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சீரமைப்பு குழுத் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார்.

இந்தியாக் கூட்டணி வலுப்பெறும்

39 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளை ஒரு மண்டலமாக பிரித்து, மண்டல தலைவர், ஒவ்வொரு நாடாளுமன்றத்திற்கு ஒரு அமைப்பாளர், 234 தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் கிராம கமிட்டி அமைக்க திட்டமிட்டு அடுத்த 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதையும் படிங்க:விசாரணையை சசிகலா தவிர்க்க முடியாது.. மோசடி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க உத்தரவு - சென்னை ஐகோர்ட்

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் வரும் 28 ஆம் தேதி கொண்டப்படவுள்ளது. அப்போது சென்னையில் தொகுதி வாரி உள்ளவர்களை அழைத்து பயிற்சி அளிக்கவுள்ளோம். காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றால் இந்தியாக் கூட்டணி வலுப்பெறும். காங்கிரஸ் வலுப்பெற்றால் இந்தியா வலுப்பெறும். கூட்டணியும் வலுப்பெறும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் பாராளுமன்றம் முறையாக நடைபெறும்'' என்றார்.

சபரீசன் திமுகவில் பொறுப்பில் உள்ளாரா?

முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அதானியை சந்தித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதை குறித்த கேள்விக்கு, '' சபரீசன் திமுகவில் பொறுப்பில் உள்ளாரா? எந்த கட்சியில் பொறுப்பிலுள்ளார்? ஒரு தனி மனிதர் யாரையும் சந்திக்ககூடாது என்றில்லை. முதல்வர் தான் சந்திக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விட்டார். அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார். விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றில்லை.

18 வயது என்பது அவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்கு மேல் படிப்பிற்கு செல்லக்கூடாது என்பது தான் ஒன்றிய அரசின் எண்ணம். ஆனால், தமிழ்நாடு அரசு திட்டத்தில் அப்படியில்லை. அதே போல் இவர் தான் இத்தொழிலை செய்யவேண்டும் என்றில்லை யார் வேண்டுமானாலும் எத்தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றுள்ளது" என்றார்.

அதானி சந்திப்பு விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''தான் அதானியை சந்திக்கவில்லை. என் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாக'' தெரிவித்தார். அதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை, பாஜக அப்படி குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஒருவேளை அப்படி சந்திப்பது குற்றமும் இல்லை. அதானிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளீர்கள் என்பது தான் எங்களது கேள்வி. ஆனால், முதல்வரின் மருமகன் சபரீசன் அதானியை சந்தித்தார்'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 12, 2024, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details