சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவும் ஏழை இளைய மக்களுக்காகவே வாழ்ந்து சென்றவர்கள். அவர் மறைந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரது வீடுகளிலும், மனங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இரு தலைவர்களும் ஆட்சிக்கு வந்து ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர்கள். அவர்களது வழியில் வரும் 2026 தேர்தலில் அம்மாவின் ஆட்சியை கொண்டுவந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுப்போம்.
திமுக ஒரு தீய சக்தி என எங்களது இரு தலைவர்களும் சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு சொல்லியதை செய்யாததால் தான் திமுகவை தீய சக்தியை என சொன்னார்கள். இப்போதும் அது தீய சக்திதான். மக்களுக்காக இந்த அரசாங்கம் எதுவும் செய்ததில்லை. வாயால் பேசிக்கொள்கிறார்களே தவிர எந்த வித வேலையும் நடக்கவில்லை.
நீர்நிலைகளை சரி செய்யவில்லை. சரி செய்வதற்காக டெண்டர்கள் விடப்படுகிறது. அதில் பாதி பேர் டெண்டர் செய்ததாக கணக்கை காட்டி இருக்கிறார்கள். பலர் போட்டி மனப்பான்மையோடு டெண்டர் எடுத்து வேலையை செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தையும் நீரில் தொலைத்த மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள். இந்த நான்காண்டு காலத்தில் மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக மக்களுக்காக அவர்களுடைய ஆட்சியையே நாங்கள் அமைப்போம்” என்றார்.
மேலும் பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பேசிய அவர், “குடிநீரில் கழிவு நீர் கலந்து மூவர் உயிர் இழந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் சென்னையில் குடிநீர் வழங்குவதற்கு என மெட்ரோ என்கிற துறை அலுவலகமும் இருக்கிறது. அதனால் கழிவு நீரில் குடிநீரில் கலப்பது தெரிந்திருக்கும், உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களில் மெட்ரோ குடிநீரை நிறுத்திவிட்டு, லாரிகள் மூலமாக குடிநீரை விநியோகம் செய்து இருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.