கிருஷ்ணகிரி: உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கு ரோஜா மலர்கள் அனைவருடைய மனதிலும் குடி கொண்டிருக்கும். தமிழகத்தின் எல்லையான ஓசூர் பகுதியில் ரோஜா உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்வதால் ஓசூருக்கு ரோஜா நகரம் என்ற பெயரும் உண்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி வருடம் முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் காய்கறி உற்பத்தி மட்டுமின்றி மலர் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, பாகலூர், பேரிகை போன்ற பல பகுதிகளில் விவசாயிகள் பசுமைக் குடில்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் தாஜ்மஹால், கிராண்ட் காளா, அவலான்ஸ், நோ ப்ளஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வகையான மலர்களை உற்பத்தி செய்கின்றனர். வருடம் முழுவதும் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் குறிப்பாகக் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினங்களில் அதிக அளவில் மலேசியா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் பாபு இன்று (பிப்.13) செய்தியாளர்களை ஓசூரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓசூர் பகுதியில் காதலர் தினத்திற்காக ஆண்டுதோறும் காதலை வெளிக்காட்டும் சிவப்பு நிற ரோஜாக்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதும் விவசாயிகள் அதற்காகத் தயாராவதும் வழக்கம்.