கோயம்புத்தூர்: தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் ‘தமிழ் தெம்பு’ என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9ஆம் தேதி துவங்கி நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (மார்ச் 17) தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதற்காக, கோவை மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. துவக்க இடத்தில் கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர், அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது.