மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு,கோழி பலியிடும் விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் இன்று (பிப்.4) போராட்டம் நடத்தவிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட நிர்வாகம் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாநகரில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய கோரி, ஹிந்துதர்ம பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சுந்தர வடிவேல் , முருகன் ஆகியோர சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்து அமைப்பினர் மதுரை, பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, இன்று மாலை 5 மணியளவில் அங்கு போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.