தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுகவும், பாமகவும் தான் திமுகவுக்கு எதிரி" - ராமதாஸ் பேச்சு..! - Ramadoss Criticized DMK

PMK Founder Ramadoss: அதிமுகவும், பாமகவும் தான் திமுகவுக்கு எதிரி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று அழைத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 2:34 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும், மதுவிலக்கு அமல்படுத்தவும் மறுக்கும் திமுக அரசு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளதை அறிந்து அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.

ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

பாமக கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களை அடைத்து வைப்பது. உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என திமுக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் வெற்றிப் பெறுவார்.

அதிமுகவும், பாமகவும் தான் திமுகவுக்கு எதிரி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று அழைத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு.

சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி, தட்டி கழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே தி குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது.

இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால் தான் பலர் கல்வி கற்றுள்ளனர் என்று திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

திமுக சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கலைஞர். இடைத்தேர்தலுக்கு பின் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும். மாநில கல்விக் கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் அதை கைவிட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்தது திமுகவும், காங்கிரஸும்தான். அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த திமுக இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்வர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளன.

தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்கவேண்டும். திமுக தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால்தான் முதல்வர் பிரச்சாரத்திற்கு வரவில்லை போல!. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடையும்" என்று ராமதாஸ் கூறினார்.

இதையும் படிங்க:'நீட் தேர்வு வரக் காரணம் சங்கல்ப் இயக்கம், பாஜக! காங்கிரஸ் கிடையாது' - செலவ்ப்பெருந்தகை

ABOUT THE AUTHOR

...view details