தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் தென்மாவட்டங்களுக்கு முன்னுரிமை" - பள்ளிக்கல்வித் துறை அதிகாரி தகவல்! - PeT Teachers posting

PeT Teachers: தமிழ்நாட்டில் கடந்த 1 ஆம் தேதி வெளியான அரசாணை 150ஐ உடனடியாக மாற்றம் செய்ய வேண்டுமெனவும், 700 மாணவர்கள் வரை உள்ள பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்தால் முழுமையாக மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தர முடியாது என்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 7:40 PM IST

சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆரோக்கிய சுந்தர்ராஜ்
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆரோக்கிய சுந்தர்ராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்கவும், விளையாட்டை ஊக்குவிக்கவும், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர்களை, மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் நியமனம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவிக்கிறது.

ஆரோக்கிய சுந்தர்ராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால் 700 மாணவர்கள் வரை உள்ள பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்தால் தங்களால் முழுமையாக மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தர முடியாது எனவும், விளையாட்டில் கவனம் செலுத்த முடியாது எனவும் உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 6,254 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாக 4,000 உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 2,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட சுமார் 1,500 உயர்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படவில்லை.

பள்ளிக் கல்வித் துறையில் 2,864 உயர்நிலைப் பள்ளிகள், 2,913 மேல்நிலைப் பள்ளிகள் என 5,777 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

250 மாணவர்களுக்கு மேல் இருந்தால் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்கள் எண்ணிக்கை சில பள்ளிகளில் உயர்ந்தும், சில பள்ளிகளில் குறைந்தும் உள்ளது.
மேலும் 1,957 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டியதும் உள்ளது.

ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படி 250 முதல் 550 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியரும், 550 முதல் 850 மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளிகளில் தலா 2 உடற்கல்வி ஆசிரியர்களும், 850 மாணவர்களுக்கும் மேல் இருந்தால் தலா 3 உடற்கல்வி ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் 700 மாணவர்கள் வரை கொண்ட அரசுப் பள்ளிகளில் 1 உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், 700 மாணவர்களுக்கும் மேல் இருந்தால் 2 உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையால் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என தெரிவித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 700 மாணவர்கள் வரை கொண்ட பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிமுறை மாற்றி இனி ஒரு ஆசிரியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதாலும், பணிச்சுமை அதிகரிப்பதுடன், மாணவர்களை கண்காணிக்கவும் முடியாது என்பதால் இந்த விதிமுறைக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் விளையாட்டுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். வட்டார, மாவட்ட, மாநில, தேசிய மற்றும் விளையாட்டு போட்டிகளை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை தமிழக அரசு குறைப்பது முரணாக அமைந்துள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில தலைவர் தேவிசெல்வம் கூறும்போது, “65 லட்சம் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் பாதிக்கப்படாமல் நாள்தோறும் உடற்பயிற்சி செய்திடவும் மாவட்ட, மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், உடற்கல்வி ஆசிரியர்களில் முதன்மையான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

அரசாணை 150ஐ உடனடியாக மாற்றம் செய்திடவேண்டும். 4,571 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும், உடற்கல்வி ஆசிரியர் நிலை -2 பணியிடம் வழங்கப்படாமல் உள்ள 2,771 உயர்நிலைப் பள்ளிகளுக்கும், உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிடமாகவும், 1,607 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடமாகவும் தரம் உயர்த்தி பதவி உயர்வு வழங்கிய பின்னர், பணியிட மாறுதல், உபரி பணியிடம், காலி பணியிடம் கலந்தாய்வு நடத்திட வேண்டும்" என தெரிவித்தார்.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனரைச் சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியார்களிடம் பேசிய மாநில தலைவர் ஆரோக்கிய சுந்தர்ராஜ்,"700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை இருந்தால் அந்த மாணவர்களை விளையாட்டு ரீதியாக ஊக்குவிப்பது கடினமாகும்.

ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினாலும், தற்பொழுது மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள பழக்கங்களையும் கண்காணித்து தொடர்ந்து நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம். மேலும், படித்து விட்டு இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில், பணியிடங்களை குறைக்க கூடாது" என தெரிவித்தார்.

மேலும், தற்போதைய நிலையில் மற்ற பாடங்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளது போல உடற்கல்விக்கு என்று தனியாக பாடதிட்டம் மற்றும் பாடப் புத்தகம் இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே, பாடப் புத்தகம் கொண்டு வரப்படும் என அரசு அறிவித்துள்ளதை செயல்படுத்த வேண்டுமென்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,"தற்போது 2,000 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நிலை இருப்பதால், உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பணிநிரவல் செய்து காலியாக உள்ள அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பணிநிரவல் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து காலியாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு புதிதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை அடிப்படையில் பணிநிரவல் அடிப்படையில் நியமிக்கப்படும்.

ஆசிரியர்கள் பெரும்பாலும் தென்மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நியமிக்கப்பட உள்ளனர். மேலும் இதற்கு முன்னர் 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் என இருந்த நிலையை மாற்றி, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள் களைவதுடன், விளையாட்டிலும் கவனம் செலுத்த முடியும்” என்று அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு - New Criminal Laws TN Committee

ABOUT THE AUTHOR

...view details