சென்னை:கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பழைய குற்றவாளிகள் இருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த இரண்டு நபர்களும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பாக, ஒரு மாத காலம் சென்னையில் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னையில் இவர்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்கள்,யாருடைய உதவியில் தங்கி இருந்தார்கள், யாரையெல்லாம் சந்தித்தார்கள் போன்ற விவரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மூன்று இடங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.