தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

அம்பத்தூர் அருகே புதரில் பதுக்கிய 500 கிலோ குட்கா பறிமுதல்! - 500 kg Gutka Seized In Chennai

சென்னை, அம்பத்தூர் அருகே விற்பனைக்காக புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குட்கா பதுக்கலில் ஈடுபட்ட புழல் கண்ணன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைதான நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்
கைதான நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே உள்ள ஒரு மைதானத்தில் அமைந்துள்ள புதர் பகுதியில், மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் டில்லி பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, சம்பவ இடத்அதிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையிலான அம்பத்தூர் போலீசார், புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த குட்காவை பதுக்கி வைத்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, குட்கா வைக்கப்பட்டிருந்த புதர் அருகே போலீசார் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர்.

அப்போது, புழல் பகுதியைச் சேர்ந்த புழல் கண்ணன் என்ற கண்ணன் என்பவர், மற்றொரு நபருடன் குட்கா வைக்கப்பட்டிருந்த புதருக்கு வந்ததாகவும், அங்கேயே புழல் கண்ணனை கையும் களவுமாக போலீசார் பிடித்தபோது, அவருடன் வந்த அவரது கூட்டாளி அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, பிடிபட்ட புழல் கண்ணனிடம் விசாரித்ததில், கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்வேறு குட்கா பொருட்களைக் கடத்தி வந்து மறைத்து வைத்திருந்ததும், அந்த குட்காவை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் சில்லறை விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:மது ஒழிப்பு மகா யாகம்..கும்பகோணத்தில் திரளாக பங்கேற்ற பெண்கள்!

இதன் தொடர்ச்சியாக புழல் கண்ணனை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட புழல் கண்ணன் பிரபல குட்கா கடத்தல் மன்னன் என்பதும், அவர் மீது கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குட்கா கடத்தல் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீசார் புழல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஆவடி பகுதியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை தடுக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details