தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

“ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு தாரைவார்க்கப்பட்டது”.. எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி! - minister trb rajaa

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் தரும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிஆர்பி.ராஜா மற்றும் எடப்பாடி பழனிசாமி
டிஆர்பி.ராஜா மற்றும் எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தார்.

இதற்கு பதில் தரும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊடகத்தினரிடம் பல முறை விளக்கம் அளித்திருக்கிறார். சட்டமன்றத்தில் தொழில் துறை மானிய கோரிக்கையில் நானும் புள்ளிவிவரங்களோடு விளக்கம் அளித்த பிறகும். எடப்பாடி பழனிசாமிக்கு விவரங்கள் புரியவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.

'இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டை விட குறைவான முதலீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்' என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி. முதலமைச்சர் அமெரிக்க பயணத்தில் 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) போடப்பட்டுள்ளன.

இன்னும் கூடுதலான முதலீடும், அதிகம் பேருக்கான வேலை வாய்ப்புகளும் உறுதி செய்வதற்கான முதல் கட்டப் பணிகள் முடிந்திருக்கின்றன. முதல் கட்டப் பணிகள் என்றால், அது ஆரம்பம் மட்டுமே. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் முதலீடுகள் செய்ய முன்வந்த அனைத்து நிறுவனங்களோடும் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை.

உறுதியாக யார், யார் பணியை துவக்குவார்கள் என்பதை பல வகையில் உறுதி செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது, ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல மாநிலங்கள் யார் அவர்களை அணுகினாலும், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கும் போதே முதலீடுகள் வருவதாக அறிவித்து விடுகிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பாலும் உறுதியாக முதலீடு வந்து சேரும் என கணித்த பின்னரே ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆகவே தான், நமது ஒப்பந்தங்களின் நிறைவேறும் விகிதம் மற்ற மாநிலங்களைவிட கூடுதலாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் முதலீட்டை ஈர்த்த லட்சணத்திற்கு உதாரணம், கியா மோட்டார்ஸ் ஒன்றே போதும். தமிழ்நாட்டில் தன் தொழிற்சாலையை அமைக்க இருந்த தென் கொரியாவின் கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ், தன் முடிவை மாற்றிக்கொண்டு, 2017-ல் ஆந்திராவுக்குப் போனது.

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 12,800 கோடி ரூபாய் முதலீடு பழனிசாமி ஆட்சியில் ஆந்திராவுக்குத் தாரை வார்க்கப்பட்டது. அந்தத் தொழிற்சாலை கைவிட்டுப் போனதால், தமிழ்நாட்டின் பத்தாயிரம் இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த வேலைவாய்ப்புகள் பறிபோயின. கியா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் அமைந்திருந்தால், அதற்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்க, அதைச் சுற்றி பல நூறு சிறு-குறு துணைத் தொழிற்சாலைகள் உருவாகியிருக்கும்.

அதன் மூலமும் மேலும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். அத்தனையும் இருண்ட அதிமுக ஆட்சியால் இழந்தோம். கியா மோட்டார்ஸ் ஆந்திராவின் அனந்தப்பூர் போனதற்கு என்ன காரணம் என பழனிசாமியால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? எதிர்க்கட்சித் தலைவர் தனது அரசியல் ரீதியான அறிக்கையில், அரசுப் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு குற்றம்சாட்டுவது என்பது முதல்வராக இருந்தவருக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், 2021-ல் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு இதுவரை 10,06,709 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 891 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. அதாவது, 60 விழுக்காடு அளவுக்கு இப்போதே எட்டியிருக்கிறோம் இது திமுக அரசின் சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலை; தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details