சென்னை:தமிழக அரசின் கனவு ஆசிரியர் திட்டம் மூலமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் 54 பேர் கல்விச் சுற்றுலாவிற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனிற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றுள்ளார்.
இதனை அறிந்த Dassault Systems நிறுவனம் தங்கள் தலைமையகம் வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது. தொடர்ந்து Dassault Systems நிறுவனத்தின் தலைமையகம் சென்ற அமைச்சர் அந்நிறுவனத்தின் 2040ஆம் ஆண்டிற்கான இலக்குகளை விவரிக்கும் காட்சிப் படங்களைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகளுடன் கல்விச் சார்ந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பள்ளிக் கல்வித் தொடர்பான திட்டங்கள் குறித்து அந்நிறுவனத்தாரிடம் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்’ எனும் விருப்பத்தை அப்போது தெரிவித்துள்ளார்கள். இதனை தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் எடுத்துரைத்து செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலயே முதன்முறையாக AI தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது Dassault Systems நிறுவனமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் நரேஷ், இணை இயக்குநர் முனைவர் ராஜேந்திரன் மற்றும் Dessault நிறுவனத்தின் வலேரி ஃபெரெட்,தியரி செவ்ரோட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்