தமிழ்நாடு

tamil nadu

பழனி கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிய வழக்கு; மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல்! - Palani temple encroachment case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 9:33 PM IST

Madurai Bench: பழனி தண்டாயுதபாணி கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பழனி நகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளை
ஐகோர்ட் மதுரைக்கிளை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்:பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், "பழனி தண்டாயுதபாணி கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றவும், கிரிவலப்பாதையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் செய்து தர” உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதன் அடிப்படையில் 152 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பழனி நகராட்சி ஆணையாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழனி கோயில் தேவஸ்தான அலுவலகம் முன்பு நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், நீதிபதி விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்தும், அரசாணையை எதிர்த்தும் எந்த வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை.

கிரி வீதியில் அப்பகுதி மக்கள் வர இயலாத வகையில் சாலையின் ஓரம் இரும்புக் கம்பிகள் ஊண்டப்பட்டுள்ளது. எனவே, கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பிரச்னைக்காக போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எந்த நிகழ்வும் நடத்தப்படவில்லை என உறுதி அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், “பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 487 கடைகள் அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி பழனி நகராட்சியில் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுவதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

அகற்றுதல் தொடர்பான விவகாரத்தில் கடை வியாபாரிகள் யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின், அதனை கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்கலாம். அவர்கள் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு ஆற்றுவது தொடர்பான பணிகளை முறையாக முடித்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு.. 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மாநில அரசு அறிவிப்பு! - KERALA LANDSLIDE

ABOUT THE AUTHOR

...view details