தமிழ்நாடு

tamil nadu

பழனி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்; திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு! - Palani temple Girivalam path

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 7:31 PM IST

Palani Temple Encroachment: பழனி கோயில் கிரிவலப்பாதையில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Palani
பழனி முருகன் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனு செய்திருந்தார்.

இந்த மனு கடந்த கடந்த சில வாரங்களுக்கு முன் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிவலப்பாதை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து 159 கட்டுமானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த முறை வழக்கு விசாரணையின் போது உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கைக்கு கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் கூட அவகாசம் கோரவில்லை. நீங்கள் ஏன் அவகாசம் கேட்கிறீர்கள்? இந்த வழக்கின் உத்தரவு நடைமுறைபடுத்தியது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 2ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:"அந்த மனசு தான் சார் கடவுள்".. பழனி கோயிலுக்கு 2 பேருந்தை நன்கொடையாக வழங்கிய தீவிர முருகன் பக்தர்!

ABOUT THE AUTHOR

...view details