சென்னை:பதினெட்டாவது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நெல்லையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸிடம் போட்டியிட்டு ஒரு லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடர வேண்டும் என்ற நீதிமன்ற நடைமுறையின் படி, நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையை விட கூடுதலாக தேர்தல் செலவு செய்துள்ளார். நேர்மையான முறையில் அவர் வெற்றி பெறவில்லை என்பதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"விஜய் போலதான் நானும்" - நடிகர் சரத்குமார் பேட்டி பெருமிதம்!
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தொடர்ந்து கால அவகாசம் வழங்க முடியாது. அடுத்த விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் ப்ரூஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவன், தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படாததால் பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.
அதற்கு நயினார் நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார். இதையடுத்து, ராபர்ட் ப்ரூஸ் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 21ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்