தமிழ்நாடு

tamil nadu

கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களின் பாதுகாப்பு; இந்து அறநிலையத்துறைக்கு முக்கிய உத்தரவு! - Temples farming land

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 9:07 PM IST

HRCE: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாக்க கோரிய வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras HC
இந்து சமய அறநிலையத்துறை (Credits - HRCE 'X' Page)

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஒரே மாதிரியாக அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்கிறீர்கள். இந்த வழக்கில் உண்மைத்தன்மை இல்லாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும், தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளதால் 44 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்வீர்களா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, அரசுத் தரப்பில், கோயில் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பது ஒரு பிளாக் மெயில் முயற்சி என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒரு வரம்புக்கு உட்பட்டு தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

பின்னர், அரசின் தவறால் தான் இதுபோன்ற வழக்குகள் வருகிறது என்று அரசுத் தரப்புக்கு சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:"கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்" - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details