கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மத்துவராயபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மத்துவராயபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருசோத்தமன் வாதிட்டார்.
மேலும், மின்வேலி அமைக்கப்பட்டுள்ள நிலத்தை வாங்கிய தனி நபர் ஈஷா மையத்தின் பினாமி எனவும், தனி நபர் வாங்கியிருந்தாலும் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தில் மின்வேலி அமைத்தது தவறு எனவும் கூறினார்.