தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 5:40 PM IST

ETV Bharat / state

2 லட்சம் கடனுக்கு ரூ.2 கோடி வட்டி.. "தென் மாவட்டங்களில் தொடரும் கந்துவட்டி கொடுமை" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - TN Usury interest issue

தென் மாவட்டங்களில் கந்துவட்டி பிரச்சினையால் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் முறையான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை( கோப்புப் படம்)
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை( கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

மதுரை: கரோனா காலத்தில் இரண்டு லட்சம் வட்டிக்கு வாங்கியதில் தனது நிறுவனத்தை எழுதி கேட்டும் மிரட்டும் கந்துவட்டி கும்பல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இளங்கோ, தாக்கல் செய்த மனு, "கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த நேரத்தில் தனிநபர்களிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றேன். இதற்காக வெற்று காசோலை மற்றும் வெற்று காகிதத்தில் கையெழுத்து போட்டு ஆவணங்களையும் கொடுத்திருந்தேன். முதலில் 10 சதவீத வட்டி கேட்டனர். முறையாக வட்டியை செலுத்தினேன். பின்னர் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டினர்.

இதுவரை ரூ.2 கோடி வரை கொடுத்துள்ளேன். வட்டித்தொகைக்காக எனது மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் எனது நிறுவனத்தை எழுதி தரும்படி கேட்டனர்.இல்லையென்றால் கொலை செய்வதாகவும் மிரட்டினர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

பின்னர் மதுரை மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்பேரில் என்னுடைய புகாரில் வழக்குபதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிப்பட்டது. இப்போது வரை அந்த உத்தரவை பின்பற்றி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவின்படி போலீசார் வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கந்துவட்டி உயிர் பலி:இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், "போலீசார் புகார் மனுக்களை பெற்ற உடன் அதுதொடர்பான நடவடிக்கையை எடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தென் மாவட்டங்களில் கந்துவட்டி பிரச்சினையால் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் முறையான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அந்த வகையில் இந்த வழக்கில் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யை எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47வது பிறந்தநாள்; மதுரையில் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் ஆர்வலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details