தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாளச் சாக்கடை கேட்டோம்.. கிடைக்குமா? கமெண்டை தட்டிவிட்ட லால்குடி எம்எல்ஏ - திமுகவில் வெடித்த பூகம்பம்! - lalgudi mla FB comment issue

Minister K.N.Nehru Vs Lalgudi MLA Soundara Pandian: அமைச்சர் கே.என்.நேருவின் முகநூல் பக்கத்தில், லால்குடி எம்எல்ஏ கோரிக்கை கமெண்ட்டை பதிவிட்ட சம்பவம் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 2:48 PM IST

லால்குடி எம்எல்ஏ முகநூல் கமெண்ட் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு
லால்குடி எம்எல்ஏ முகநூல் கமெண்ட் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு (Credits - Minister K.N.NEHRU Facebook page)

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் நகராட்சி தலைவர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் முக்கிய விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சமூகவலைத்தளப் பக்கத்தில், கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்த பேஸ்புக் பக்கத்தில், லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் பரபரப்பை ஏற்படுத்தும் விதமான கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு பணிவான வேண்டுகோள். 11-10-2021 அன்று நான் தங்களிடம் லால்குடி நகராட்சிக்கு பாதாளச் சாக்கடை திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்பதனை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். நிறைவேற்றித் தருவீர்களா?" என கேள்வி எழுப்பி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "லால்குடி எம்எல்ஏவை அழைத்து சமாதானம் பேசியாச்சு"- அமைச்சர் கே.என்.நேரு பதில்!

ஏற்கனவே கடந்த மாதம் தனது தொகுதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாததற்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில், "லால்குடி சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டதால் தொகுதி காலியாக உள்ளது" என பதிவிட்டிருந்தார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு அமைச்சரிடம் கொடுத்த கோரிக்கையை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு பதிவை போட்டுள்ளார்.

இந்த விவகாரம் திருச்சி திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இந்த கமெண்ட் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த கமெண்ட் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details