தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 9:47 PM IST

ETV Bharat / state

சொத்துக்குவிப்பு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது ஏன்? - நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பதில்! - Justice Anand venkatesh

Madras High Court: அமைச்சர்கள் மற்றும் முன்னார் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஏன் விடுவிக்கப்பட்டார்கள் என்பதற்கான காரணத்தை அறிய விரும்புவதால் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Justice
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உட்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில், சுலோச்சனா தியேட்டரை 2007-08-ல் ஆறு இடங்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் மருத்துவமனையில் இருந்தபோது, 8 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மாமனார் வேதகிரி செலவு செய்த பணத்தையும், பெட்ரோல் செலவாக 6 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சொந்த வாகனத்துக்கு பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுலோச்சனா தியேட்டர் விற்பனை மூலம் கிடைத்த 37 லட்சம் ரூபாய் பங்குதாரர்களின் தொகையும் அமைச்சர் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக, யாரிடம் பணம் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்த பின்னரும், லஞ்ச ஒழுப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “வழக்கில் புதிய ஆவணங்கள் இல்லாதபோது வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்திக்கு உரிமை உள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கினாலும், தொடர் விசாரணையில் தான் ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்பது தெரியவரும். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆதாரம் இல்லை என தெரிய வந்தால் அவர்களை நீதிமன்றம் விடுவிக்கலாம்.

புகார் அளிக்கப்பட்டதற்காக ஒருவரை குற்றவாளியாக கருதி, ஏன் தொடர்ந்து விசாரணை நடத்தவில்லை என கேட்க முடியாது. புகாரின் அடிப்படையில் விசாரணை அமைப்பு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும்” என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, “விசாரணை அமைப்பின் நிலை மாறியது ஏன் என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. மீண்டும் ஏன் விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார். நீதிமன்றம் யாரையும் குற்றவாளியாக்க விரும்பவில்லை, ஏன் விசாரணை அமைப்பு தனது முடிவை மாற்றியது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறது. நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என விரும்புகிறது.

ஒருவர் விடுவிக்கப்பட்டதற்காக உண்மையான காரணத்தை அறிய விரும்புகிறது. ஆட்சியில் இருந்தால் ஒரு மாதிரியும், ஆட்சி மாறினால் வேறு மாதிரியாகவும் எப்படி விசாரணை மாறியது? தனது விசாரணையின் நோக்கம் எந்த காரணத்திற்காக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை உலகுக்கு அறிவிக்க விரும்புவதாக” தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:கழுகுகள் மரணம்; விவசாயிகள் கால்நடைகளுக்கு சில மருந்துகளை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தமிழக அரசு சென்னை ஐக்கோர்டில் தெரிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details