சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் தனியார் மழலைகள் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிராமத்தை நினைவுகூறும் வகையில் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பரத நாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குறவர் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகிய கிராமிய கலைகளை புரிந்து பொங்கல் நிகழ்ச்சியை கோலாகலமாக்கினர்.
இதுகுறித்து பேசிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, “எங்கள் பள்ளியில் மண்மணக்கும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். இந்த பொங்கல் நிகழ்ச்சி மூலம் குழுந்தைகளுக்கு கிராமத்து நிகழ்வுகளை கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.
இதையும் படிங்க: "பொங்கலோ பொங்கல்".. தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்!
அதற்காக பொங்கல் பண்டிகையிலும், விவசாயத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் மாடுகளை அழைத்து வந்து மரியாதை செலுத்தி, 10 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் எடுத்து, பள்ளி குழந்தைகளை அமர வைத்து சோலையப்பன் தெரு, தணிகாசலம் தெரு, கப்பல் போலு தெரு ஆகிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றோம். பின், கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றை குழந்தைகள் ஆடி மகிழ்ந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்ற கிராமிய நிகழ்ச்சிகளுந்தான் பொங்கல் பண்டிகையை நாங்கள் கொண்டாடி வருகிறோம். ஆனால், இந்த முறை கிராமத்து வாழ்க்கையை நகரத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினோம்” என்றார்.