மதுரை:தைப் பொங்கல் காலங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மதுரையில் பெரும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த அரங்கத்தை திறந்து வைத்த அன்று மட்டுமே அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
முதல் நாள்:இந்த நிலையில் திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியாக பிப்ரவரி 11, 12 மற்றும் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நேற்று (பிப்.11) ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டது. முதல் நாளான நேற்று போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7 மணியளவில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளைத் தழுவும் வீரர்களுக்கும் தங்க காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த காளைகள் பங்கேற்கின்றன.