தமிழ்நாடு

tamil nadu

ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த கூடாது; தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 4:57 PM IST

Election training class: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த கூடாது

சென்னை:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திடக் கூடாது எனவும், தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கின்றோம்.

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக, விடைத்தாள் மதிப்பிடும் பணி ஆசிரியர்களுக்கு தொடங்குகிறது. விடைத்தாள் மதிப்பிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, வாரத்தின் ஆறு நாட்களும் நடைபெறும்.

வாரத்தில் ஆறு நாட்களும் மிகவும் கூர்மையாகவும், கவனமுடன் மேற்கொள்ளும் முக்கிய பணியாக விடைத்தாள் மதிப்பிடும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் பயிற்சி அளிக்கும் போது, தேர்தல் பணிக்கான பயிற்சியையும் சிறப்பாக கையாளுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கால அட்டவணையில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பயிற்சி வகுப்புகள் அமைத்திட வேண்டும்.

தேர்தல் பணிகளில் பங்குபெறும் அனைவருக்கும் தேர்தல் பணியாற்றும் இடங்களிலும், பயிற்சிகள் நடைபெறும் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் அமைத்து தர வேண்டும். தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள், தேர்தல் பணியாற்றும் இடங்களில் உணவு மற்றும் கடுமையான வெயில் காலம் என்பதால், குடிநீர் மற்றும் தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தல் முடிந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக திரும்பும் வகையில், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

தேர்தல் பணியில் நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள், மனநலம் குன்றிய மற்றும் தீவிர நோயுற்ற குழந்தைகள் பாதுகாக்க வேண்டியிருக்கும் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும்.

தேர்தல் அலுவலர்களாக பணி நியமனம் செய்யும்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் PO (or) P1 மட்டுமே பணி ஆணை வழங்கிட வேண்டும். கடந்த காலங்களில் P2, P3 பணிகளில் அமர்த்தி விட்டு, எங்களது பணித் தொகுதிக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை தலைமை தேர்தல் அலுவலராக நியமித்த போக்கு நடைபெற்றது. வருகின்ற தேர்தலில் அவ்வாறு நடைபெறாத வகையில் சரியான முறையில் பணி ஆணைகள் வழங்கிட வேண்டும்.

தேர்தல் பணிகள் வழங்கும்போது பணியாற்றும் இடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து அதிக தொலைவில் தேர்தல் பணிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே அவர்கள் சட்டமன்றத் தொகுதி தவிர்த்து, அதற்கு அருகாமையில் உள்ள இடங்களில் 50 கி.மீக்கு மிகாமல் பணி வழங்கிட ஆணை செய்ய வேண்டும். அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியாற்றும் அர்வலர்களுக்கு EDC வழங்கி பணியாற்றும் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஆவணம் செய்ய வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும்போது எதிர்பாராத விபத்துகள் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே அனைவருக்கும் 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்து ஊழியர்களுக்கு மற்றும் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?

ABOUT THE AUTHOR

...view details