திருப்பத்தூர்: சொத்து பிரச்சனை காரணமாக அகரம் பகுதியில் ஓர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி பொக்லைன் இயந்திரம் கொண்டு வீட்டை இடித்து தரைமட்டம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி வீட்டின் உரிமையாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் கிராம காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலன். இவரது மகன்கள் முனிரத்தினம் மற்றும் நடராஜன். இவர்கள் இருவரும் 1998 ஆம் ஆண்டு அகரம் பகுதியில் சுமார் நான்கரை ஏக்கர் அளவு நிலத்தை வாங்கி தனது தந்தை(கூலன்) பெயரில் கிரையம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து, மூத்த மகன் முனிரத்தினம் தனது தந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, அவரது பெயரில் உள்ள நான்கரை ஏக்கர் சொத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதன் பின்னர், தந்தையை பராமரிக்காமல் இரண்டாவது மகனான நடராஜன் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து அவரது தந்தை உயிரிழந்த நிலையில், சொத்து முழுவதும் தனக்கு சொந்தம் என்று தெரிவித்துள்ளார். இதில், நடராஜன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நிலம் வாங்குவதில் தான் பணம் கொடுத்ததால் நிலத்தில் தனக்கு பங்கு உண்டு எனக்கூறி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது எப்படி? குழந்தைகள் உரிமை ஆர்வலர் பிரத்யேக பேட்டி!
இதற்கிடையில், முனிரத்தினம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், அவருடைய மகன் கணேஷ் குமார், கடந்த 2023 ஆம் ஆண்டு சொத்துக்கள் அனைத்தும் தனக்கு சொந்தம் என முனிரத்தினம் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுதியுள்ளார். மேலும், அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை காலி செய்யுமாறு நடராஜனிடம் கூறியுள்ளார்.
நடராஜன் வீட்டை காலி செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த கணேஷ் இன்று (பிப்ரவரி 06), வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து வீட்டை இடித்து தரமட்டமாக்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த நடராஜன், வாழ்வாதார இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கதறி அழுதுள்ளார்.
தொடர்ந்து, இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடராஜன் தனது அண்ணன் மகனான கணேஷ் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராம காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டை இடித்து தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.