சென்னை: இன்றைய தலைமுறைகள் பெரும்பாலும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்வதை முற்றிலுமாக குறைத்துவிட்டனர். தற்போது ஐ.டி. பொறியாளர்கள் இடமாற்றம் செய்ய தயங்குகிறார்கள் என எல் & டி தலைவரும், நிர்வாக இயக்குநருமான எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சிஐஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'மிஸ்டிக் சவுத் குளோபல் லிங்கேஜஸ் உச்சி மாநாடு 2025' (CII Mystic South Global Linkages Summit 2025) நேற்று (பிப்ரவரி 10) தொடங்கியது.
இந்நிலையில், உலகளாவிய பொருளாதாரத்தின் தென்மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவது குறித்தான கருத்தரங்கம், இன்று (பிப்ரவரி 11) நடைபெற்றுள்து.
இதில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துக்கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். குறிப்பாக எல் & டி தலைவரும், நிர்வாக இயக்குநருமான எஸ்.என். சுப்ரமணியன் கலந்துகொண்டு இந்தியாவின் கட்டுமானத் துறையில் அதிகரித்து வரும் சவால்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "உலகின் பல்வேறு இடங்களிலும், தங்களது ஊரை விட்டு மற்ற பகுதிகளுக்கு செல்வது, அங்கு வணிகம் செய்வது முக்கிய கவலையாக இருந்தாலும், பல தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர விரும்புவதில்லை. இது ஒரு தனித்துவமான பிரச்சனை. இந்த பிரச்சினையை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது.
இது குறிப்பாக, தேசிய வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கக்கூடிய சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இடையூறாக உள்ளது. எல் & டி நிறுவனத்தில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், நிறுவனத்தின் அதிக தேய்வு விகிதங்கள் (attrition rates) காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1.6 மில்லியன் தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டியுள்ளது.
பணியாளர்களைத் திரட்டுதில் பெரிய சவால்:
வேலைக்கு ஆட்களை சேர்ப்பது மற்றும் வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்ற தகவல்கள் தற்போது சேனல்களை விட டிஜிட்டல் தொடர்பு மூலமாக தொழிலாளர்களை சென்றடைகிறது. தச்சர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் குறித்த செய்திகள், தற்போது டிஜிட்டல் முறை மூலம் அறிவிக்கப்படுகிறது. இதில் அவர்கள் அந்த வேலையை ஏற்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும் தேவையான பணியாளர்களைத் திரட்டுவது பெரிய சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: 2035-க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடையும்! சிஐஐ சென்னை மண்டல தலைவர் முருகவேல் ஜானகிராமன் பேட்டி! |
தொழிலாளர்கள் ஏன் இடம்பெயர விரும்பவில்லை?
தொழிலாளர்கள் இடம்பெயர தயங்குவதற்கு ஜன் தன் அக்கவுண்ட் (Pradhan Mantri Jan Dhan Yojana), நேரடிப் பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer), கரீப் கல்யாண் யோஜனா(Pradhan Mantri Garib Kalyan Yojana) மற்றும் MGNREGA திட்டம் போன்ற அரசு திட்டங்கள் தான் காரணம். இந்த திட்டங்கள் தொழிலாளர்களுக்கு தங்கள் வருமானத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம் என்பதாலும், வேற இடங்களுக்கு சென்று ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்ற எண்ணத்தில் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாக பலரும் வேலைக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற மறுக்கின்றனர்.
தொழில்நுட்ப வல்லுநர்களிடையே இதுபோன்ற போக்கு உள்ளதா?
கட்டுமானப் பணியாளர்களைத் தனிர்த்து, பொறியியல் பட்டதாரிகள் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இதேபோன்ற போக்கு இருக்கிறது. முந்தைய தலைமுறையினரை போன்று இல்லாமல், இன்றைய இளம் தொழில் வல்லுநர்கள் வேலைக்காக இடம்பெயர மிகவும் தயங்குகிறார்கள். முன்னர் பொறியாளர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு வேலை செய்வார்கள். இதனால் அவர்களது வேலை செய்யும் திறனும், திறமையும் அதிகரித்தது.
ஆனால், இன்றைய தலைமுறைகள் பெரும்பாலும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வேலை செய்வதை முற்றிலுமாக குறைத்துவிட்டனர். இதனால் திறமைகள் ஒரே இடத்தில சுருங்கிவிடுகிறது. தங்கள் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கும் தயங்குகிறார்கள். இந்த மாற்றங்கள் தற்போது ஐடியில் அதிகமாக தெரிகிறது. மேலும், அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் அல்லது சீனியர்கள் இளம் தலைமுறையின் போக்கை புரிந்துகொள்ள அதிகமாக போராடுகிறார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.