தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடம்பூர் சிதம்பபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டிக்கும் வகையில் 'யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது.
இதனை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பேசுகையில், '' அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை தமிழநாடு அரசு சரியாக கையாளவில்லை என்று நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
'யார் அந்த சார்? என்று கேட்டதும் இந்த அரசுக்கு அச்சம், பயம், பதட்டம் ஏற்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, ஆளுநரைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்துகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடும் திமுக, தங்களது 40 எம்பிக்களை வைத்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு அல்லது பிரதமர் இல்லம் முன்பு போராட வேண்டியது தானே?