தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் நகராட்சி ஏலம் விடுவதில் சலசலப்பு.. பேரிகார்டுகளை தாண்டி ஏலதாரர்கள் போராட்டம்! - Tirupattur municipality tender

Tirupathur Municipality tender issue: திருப்பத்தூர் நகராட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை இடங்களின் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இன்று நடக்கவிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சலசலப்பால் ஏலம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நகராட்சி பொது ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
நகராட்சி கவுன்சிலர்களை மட்டும் உள்ளே அனுமதித்ததால் சலசலப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 7:46 PM IST

நகராட்சி கவுன்சிலர்களை மட்டும் உள்ளே அனுமதித்ததால் சலசலப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் 2024 முதல் 2027ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டுகளுக்கு, குத்தகை இடங்களின் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இன்று (பிப்.29) நடக்கவிருந்தது. இதில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிட அறைகளில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை உள்ளிட்ட எட்டு வகையான இடங்களுக்கு குத்தகை உரிமை ஏலம் விடப்பட இருந்தது.

இதனால் நகராட்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பேரிகாடுகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குத்தகை ஏலம் எடுக்க உரிமை கோரிய அனைவரும், நகராட்சி அலுவலக வாசலில் காத்திருந்தனர். அப்போது, திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் மட்டும் நகராட்சி அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஏலதாரர்கள், கவுன்சிலர்களை வெளியில் அனுப்புங்கள், அவர்களுக்கு ஏலம் நடக்கும் இடத்தில் என்ன வேலை எனக் கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென பேரிகாடின் மீது ஏறினர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க நகரச் செயலாளர் பைரோஷ் கான், நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர், நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று நடைபெற இருந்த பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளியை தற்போது நிர்வாக காரணத்திற்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறு ஏலம் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஏலம் ஒத்தி வைத்ததை தொடர்ந்து, ஏலம் எடுக்க வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க: பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி; கணக்குகளை கையாள்வதற்கு உயர்மட்ட தணிக்கை குழு - உயர்கல்வித்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details