சென்னை:சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மாட்டின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனக் கூறியது பேசுபொருளான நிலையில், அது உண்மை தான் என பா.ஜ.க., மூத்த தலைவரும், மருத்துவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பன் அவர்கள் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழிசை செளந்தரராஜனிடம் செய்தியாளர்கள் தரப்பில் ‘கோமியம்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கோமியம் ஆயுர்வேத மருந்து
அதற்கு பதிலளித்து பேசிய அவர், "மாட்டின் கோமியத்தை அமிர்த நீர் என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல்ரீதியாவும், தொழில்நுட்பரீதியாகவும் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை கல்லூரியை வழி நடத்துபவர் சும்மா கூறுவாரா?," என்று கேள்வியெழுப்பினார்.