சென்னை:சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, ரூ. 63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள, மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகின்றன.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் - சிறுசேரி வரை 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.11.2024 அன்று BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் ராஜேஷ்சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் BEML நிறுவனத்தின் இயக்குநர் (இரயில் மற்றும் மெட்ரோ) ராஜீவ் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில்), இணை பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் மெட்ரோ இரயில்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் BEML நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ இரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஒட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்று ஒப்பந்தங்களின் வரிசையில் இரண்டாவது ஒப்பந்தமாகும். மேலும் முன்மாதிரி இரயில் ஏற்கெனவே சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.