சென்னை:அவசர தேவைகளுக்காகவிமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை, மேல்மருவத்தூர் அருகே ஆம்புலன்ஸ் உடன் மடக்கிப் பிடித்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு விமான முனைய புறப்பாடு பகுதி அருகே, நுழைவாயில் முன் பிரபல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அவசர தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் கணேசன் (30) கழிவறைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, திடீரென வாகனம் மாயமாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கணேசன், விமான நிலைய வளாகம் முழுவதும் தேடியுள்ளார். எங்கு தேடியும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், சென்னை விமான நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி, அதனை ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகிய இருந்துள்ளது.
மேலும், திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி இருந்த நிலையில், அதை கண்காணித்தபோது ஆம்புலன்ஸ் வாகனம், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.