தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயில் நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணி.. பக்தர்கள் நீராட மாற்று ஏற்பாடு! - THIRUCHENDUR MURUGAN TEMPLE

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால், பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடக் கோயில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில், நாழிக்கிணறு
திருச்செந்தூர் முருகன் கோயில், நாழிக்கிணறு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 7:52 AM IST

தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாழிக்கிணற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடக் கோவில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகவும், சிறந்த பரிகாலத்தலமாகவும் விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமின்றி, திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோயில் முன்புள்ள கடற்கரையில் நீராடி பின்னர் கடற்கரையோரம் உள்ள நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு முருகனை வழிபாடு செய்யச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், திருச்செந்தூரில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாழிக்கிணற்றைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடப்பதால், மின்மோட்டார் மூலம் தீர்த்த தொட்டியில் தீர்த்தம் நிரப்பி பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அழகர் கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு வழக்கு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு!

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளில் ஒரு பகுதியாக நாழிக்கிணற்றைப் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவும் பணிகள் துவங்க வேண்டியுள்ளது.

கோயில் நிர்வாகம் செய்துள்ள மாற்று ஏற்பாட்டில் நீராடும் பக்தர்கள் (ETV Bharat Tamil Nadu)

எனவே, நாழிக்கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் தீர்த்தத் தொட்டியில் நிரப்பி அதன் மூலம் பக்தர்களுக்கு நாழிகிணறு தீர்த்தம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாழிக்கிணற்றை நல்ல முறையில் திருப்பணி செய்ய வேண்டும் என்பதற்காகவும், பக்தர்களுக்கு நாழிக்கிணறு தீர்த்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டிற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் கோயில் முன்புள்ள நாழிக்கிணறு மூடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக மின் மோட்டார் மூலம் நாழிக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வெளியே உள்ள வாட்டர்டேங்கில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதில் கோயில் பணியாளர்கள் மூலம் தண்ணீர் வாளியில் சேகரிக்கப்பட்டு பக்தர்கள் நீராடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details