சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மொத்தமாக 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, பரப்புரையை தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
அதிமுக கூட்டணி: அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேமுதிகவுக்கு 5 தொகுதிகள, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறுதி:ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஓய்வூதியம், 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலி ரூ.450 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
தேர்தல் பரப்புரை: அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருச்சியிலிருந்து தனது தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவர பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில், நவலூர் குட்டப்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.